Add parallel Print Page Options

எருசலேமின் அளவுகள்

பிறகு நான் பார்த்தேன், நான் ஒரு மனிதன், அளவு கயிற்றினை எடுத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். நான் அவனிடம், “எங்கே போய்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் என்னிடம், “நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்” என்றான்.

பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான். இன்னொரு தூதன் அவனோடு பேசப் போனான். அவன் அவனிடம், “ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது என்று சொல். அவனிடம் இவற்றைச் சொல்!

“‘எருசலேம் சுவர்களில்லாத நகரமாகும்.
    ஏனென்றால் அங்கே ஏராளமான ஜனங்களும் மிருகங்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.’
கர்த்தர் கூறுகிறார்:
‘நான் அவளைக் காப்பாற்றுவதற்கு அவளைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன்.
    அந்நகரத்திற்கு மகிமையைக் கொண்டுவர நான் அங்கே குடியிருப்பேன்’” என்றான்.

தேவன் தமது ஜனங்களை வீட்டிற்கு அழைக்கின்றார்

கர்த்தர் கூறுகிறார்:
“சீக்கிரம்! வடக்கே உள்ள நிலத்திலிருந்து ஓடு.
    ஆம், நான் உங்கள் ஜனங்களை எல்லாத் திசைகளுக்கும் சிதறடித்தேன் என்பது உண்மை.
சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள்.
    ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
உன்னிடமிருந்து திருடிய ஜனங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்.
    உங்களைக் கனப்படுத்தும்படி என்னை அனுப்பினார். ஏனென்றால், யார் உன்னைக் காயப்படுத்தினாலும், அது தேவனுடைய கண்மணியைக் காயப்படுத்துவது போன்றதாகும்.
பாபிலோனியர், என் ஜனங்களை அடிமைப்படுத்தினார்கள்.
    ஆனால் நான் அவர்களைப் பலமாக அடிப்பேன்,
அவர்கள் என் ஜனங்களின் அடிமைகளாவார்கள்,
    பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அறிவார்கள்.

10 கர்த்தர் கூறுகிறார்:
“சீயோனே, மகிழ்ச்சியோடு இரு.
    ஏனென்றால், நான் வந்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்கள் நகரத்தில் வாழ்வேன்.
11 அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அவர்கள் எனது ஜனங்களாவார்கள்.
    நான் உங்கள் நகரில் வாழ்வேன்”
பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
    என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

12 கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுப்பார்.
    யூதா பரிசுத்தமான நாடாக, அவரது பங்காகச் சேரும்.
13 ஒவ்வொருவரும் அமைதியாக இருப்பார்கள்.
    கர்த்தர் அவரது பரிசுத்தமான வீட்டை விட்டு வெளியே வருவார்.