Add parallel Print Page Options

ஆபிரகாமைப்போன்று இஸ்ரவேலர் இருக்க வேண்டும்

51 “உங்களில் சிலர் நல்வாழ்வு வாழக் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள். உதவிக்காக நீங்கள் கர்த்தரிடம் போகிறீர்கள். என்னைக் கவனியுங்கள்! உங்கள் தந்தையான ஆபிரகாமை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கன்மலையாகிய அவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்கள். ஆபிரகாம் உங்களுடைய தந்தை. நீங்கள் அவனைப் பாருங்கள்! நீங்கள் சாராளைப் பாருங்கள்! உங்களைப் பெற்றவள் அவள். நான் அழைக்கும்போது ஆபிரகாம் தனியாக இருந்தான். பிறகு நான் அவனை ஆசீர்வதித்தேன். அவன் பெரிய குடும்பமாக ஆனான். அவனிடமிருந்து ஏராளமான ஜனங்கள் வந்தனர்”.

அதே வழியில், கர்த்தர் சீயோனையும் அவளது எல்லா பாழான இடங்களையும் தேற்றுவார். அவளுக்காகவும், அவளது ஜனங்களுக்காகவும் கர்த்தர் வருத்தப்படுவார். அவளுக்காக அவர் பெரிய செயல்களைச் செய்வார். கர்த்தர் வனாந்திரத்தை மாற்றுவார். வனாந்திரம் ஏதேன் தோட்டத்தைப்போன்ற தோட்டமாகும். அந்தத் தேசம் காலியாய் இருந்தது. ஆனால் இது கர்த்தருடைய தோட்டம் போலாகும். அங்குள்ள ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் வெற்றியைக் குறித்தும், நன்றிகூறியும் பாடுவார்கள்.

“எனது ஜனங்களே! என்னைக் கவனியுங்கள்!
    எனது முடிவுகள் ஜனங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் காட்டும் வெளிச்சங்களாக இருக்கும்.
நான் நியாயமாக இருப்பதை விரைவில் காட்டுவேன். நான் விரைவில் உன்னைக் காப்பாற்றுவேன்.
    நான் எனது வல்லமையைப் பயன்படுத்தி நாடுகளை எல்லாம் நியாயம்தீர்ப்பேன்.
துரமான இடங்கள் எல்லாம் எனக்காகக் காத்திருக்கின்றன.
    அவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள என் வல்லமைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வானத்தைப் பாருங்கள்!
    கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள்
வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப்போன்றும்,
    பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப்போன்றும் ஆகும்.
பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள்.
    ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும்.
    எனது நன்மைக்கு முடிவு இராது.
நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும்.
    என் போதனைகளைப் பின்பற்றுகிற ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.
தீயவர்களுக்காக அஞ்சவேண்டாம்!
    அவர்கள் உன்னைப்பற்றிச் சொல்லும் தீயவற்றுக்கு அஞ்ச வேண்டாம்!
ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப்போன்றவர்கள்.
    அவற்றைப் பொட்டுப்பூச்சிகள் உண்ணும் அவர்கள் மரக் கட்டையைப்போலாவார்கள்.
கரையான் அவற்றை உண்ணும்.
    ஆனால், எனது நன்மை என்றென்றும் தொடரும்.
    எனது இரட்சிப்பு என்றென்றும் தொடரும்!”

தேவனுடையச் சொந்த வல்லமை அவரது ஜனங்களைக் காப்பாற்றும்

கர்த்தருடைய கையே!
    (வல்லமை) எழும்பு, எழும்பு, பலமாகு!
உனது பலத்தைப் பயன்படுத்து, நீண்ட காலத்துக்கு முன்பு நீ செய்தது போன்றும் பழங்காலத்தில் நீ செய்ததுபோன்றும் நீரே ராகாப்பைத் தோற்கடிக்க வல்லமையாக இருந்தீர்.
    நீர் அந்த பயங்கர பிராணியைத் தோற்கடித்தீர்.
10 கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்!
    கடலின் ஆழமான இடங்களில் சாலைகளை அமைத்தீர்.
    சாலையைக் கடந்த உமது ஜனங்கள் காப்பாற்றப்பட்டனர்.
11 கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்.
    அவர்கள் சீயோனுக்கு மகிழ்ச்சியோடு திரும்புவார்கள்.
அவர்கள மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
    அவர்களது மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் என்றென்றும் இருக்கிற கிரீடம்போல் இருக்கும்.
அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவார்கள்.
    அனைத்து துக்கங்களும் வெளியே போகும்.
12 கர்த்தர் கூறுகிறார், “உனக்கு ஆறுதல் தருகிற ஒருவர் நான் மட்டுமே.
    எனவே, நீங்கள் ஜனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும்.
அவர்கள் வாழவும் மரிக்கவும் கூடிய ஜனங்கள் தான்.
    அவர்கள் மானிடர்கள் மட்டுமே. புழுக்களைப்போலவே மரிக்கிறார்கள்”.

13 கர்த்தர் உன்னைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார்.
ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய்.
    எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய்.
அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.

14 சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
    அந்த ஜனங்கள் சிறைக்குள் மரித்து அழுகமாட்டார்கள்.
    அந்த ஜனங்கள் போதிய உணவைப் பெறுவார்கள்.

15 “நானே உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் கடலைக் கலக்கி அலைகளைச் செய்தேன்” (சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்).

16 “எனது தாசனே! நீ சொல்லுவதற்குரிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன். நான் எனது கைகளால் உன்னை மூடி பாதுகாப்பேன். நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உன்னைப் பயன்படுத்தி இஸ்ரவேலரிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்று சொல்லுவேன்”.

தேவன் இஸ்ரவேலைத் தண்டித்தார்

17 எழும்பு! எழும்பு!
    எருசலேமே எழும்பு!
கர்த்தர் உன் மீது மிகவும் கோபமாய் இருந்தார்.
    எனவே, நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள்.
உங்களுக்கான இந்தத் தண்டனையானது ஒரு கிண்ணம் விஷத்தை குடிக்க வேண்டியதுபோல இருந்தது.
    நீங்கள் அதைக் குடித்தீர்கள்.

18 எருசலேமில் பல ஜனங்கள் இருந்தனர். ஆனால், எவரும் அவளுக்காகத் தலைவர்கள் ஆகவில்லை. அவள் வளர்த்த அந்தப் பிள்ளைகளும் அவளை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டிகளாக வரமாட்டார்கள். 19 துன்பங்கள் எருசலேமிற்கு இரு குழுக்களாக, அதாவது, திருடுதலும் உடைத்தலும் மற்றும் பெரும் பசியும் சண்டையும் என்று வந்தது.

நீ துன்பப்படும்போது எவரும் உதவி செய்யவில்லை. எவரும் உன்மீது இரக்கம்கொள்ளவில்லை. 20 உனது ஜனங்கள் பலவீனர் ஆனார்கள். அவர்கள் தரையில் விழுந்து அங்கேயே கிடந்தார்கள். அந்த ஜனங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் மிருகங்களைப்போன்று வலைக்குட்பட்டிருந்தனர். அவர்கள் கர்த்தருடைய கோபத்திலிருந்து, மேலும் தண்டனையைப் பெற முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டனர். தேவன் மேலும் தண்டனை கொடுக்கப்போவதாய் சொன்னபோது, அவர்கள் மிகவும் பலவீனம் உடையவர்களாய் இருந்தனர்.

21 ஏழை எருசலேமே, எனக்குச் செவிகொடு! குடிகாரனைப்போன்று நீ பலவீனமாய் இருக்கிறாய். ஆனால், நீ திராட்சைரசத்தை குடிக்கவில்லை. நீ, “விஷக் கோப்பையால்” பலவீனமாக இருக்கிறாய்.

22 உனது தேவனும், கர்த்தருமாகிய ஆண்டவர் அவரது ஜனங்களுக்காகப்போரிடுவார். அவர் உன்னிடம், “பார், விஷக்கிண்ணத்தை (தண்டனை) உன்னிடமிருந்து எடுத்துவிடுகிறேன். உன்னிடமிருந்து எனது கோபத்தை நீக்கிக்கொள்கிறேன். இனிமேல் எனது கோபத்தால் நீ தண்டிக்கப்படமாட்டாய். 23 உன்னைப் பாதித்தவர்களைத் தண்டிக்க எனது கோபத்தைப் பயன்படுத்துவேன். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல முயன்றார்கள். அவர்கள், ‘எங்கள் முன்பு பணியுங்கள். நாங்கள் உன்னை மிதித்துச் செல்வோம்’ என்றனர். அவர்கள் முன்பு பணியுமாறு வற்புறுத்தினார்கள். பிறகு, உனது முதுகின்மேல் புழுதியைப்போன்று மிதித்துச் சென்றனர்! நீங்கள் நடந்து செல்வதற்கான சாலையைப்போன்று இருந்தீர்கள்.”